Thursday, September 15, 2005

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன.

அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார்.

இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை யாரும் விமர்சனம் செய்துவிடக்கூடாது. என்ன நியாயம் இது?

நேசகுமார் என்பவர் யார்? உலக உயர்விற்கும் மனித மேம்பாட்டிற்கும் பாடுபாடும் மனித சேவகரா? அல்லது மதங்களின் தத்துவங்கள் அறிந்த ஓர் யோகியா? புழுத்துக் கிடக்கும் சேற்றை எடுத்து பிறர் மீது வீசிக் கொண்டிருக்கும் ஓர் அரைகுறை சிந்தனையாளர். ஒரு சாதாரண மனிதர். அவ்வளவுதான். சாதாரண மனிதரான இவருக்கே இத்தனை வருத்தம் என்றால் உலக மக்களின் ஐந்தில் ஒருவர் பின்பற்றும், போற்றும் மாபெரும் மனிதரான முஹம்மது (ஸல்) அவர்களை சரியான ஆதாரமின்றி தனிப்பட்ட முறையில் இகழ்ந்தும் அவமதித்தும் எழுதி வருவதை எப்படி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். இவருக்கு இஸ்லாத்தையும் நபிகளாரையும் பிடிக்காமல் இருக்கலாம், அது அவருடைய சிந்தனைக்கும் உரிமைக்கும் உள்ள விஷயம்.

இவர் என்ன கொள்கை விவாதமா செய்துவருகிறார், அவரிடத்தில் மதங்களில் மண்டியிருக்கும் தத்துவக் கோட்பாடுகளை விவாதிப்பதற்கு? இவரின் இஸ்லாமிய மறுப்பு அல்லது எதிர்ப்புக் கொள்கைகளை கடைபோட்டு விற்க முயலும்போது எதிர்ப்புகள் வரத்தானே செய்யும். அதற்கு ஏன் இத்தனை வருத்தம்?

நல்லடியாரின் மறுப்புக் கட்டுரை அதிலும் தமிழோவியத்திலேயே வருவதை எதிர்பார்க்காத நேசகுமார் சற்று மனம் தளர்ந்து போனதென்னவோ மனித இயல்புதான், அதற்காக இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தனது உண்மை முகத்தை இத்தனை வேகமாக, கேவலமாக வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்தி இருப்பதுதான் எனக்கும் சற்று வருத்தமாக இருக்கிறது. அதிலும் ஆரோக்கியம் என்றொரு (நேசகுமாரை விட) தகுதியிலும் சிந்தனையிலும் குறைவான ஒரு மனிதரின் கட்டுரைகளை மேற்கோள் காட்டும் அளவிற்கு வேதனைப் பட்டிருப்பது அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தகுதிக்கும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

முழுமையான எதையும் முழுமையற்ற ஒன்று உணரவோ அறியவோ முடியாது. முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையை முழுமையற்ற மனித அறிவால் முற்றிலும் உணரமுடியாது. முழுமை அடையத் துடிக்கும் மனிதப் போராட்டத்தில் எவன் ஒருவன் தான் முற்றிலும் அறிந்தவன் என்று நினைக்கின்றானோ அவன் தன்னை முற்றிலும் உணராதவன்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இந்தியா மிகப்பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அதனால் இவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டதாகவும் எங்கோ புலம்பியதை இங்கும் வந்து புலம்பியிருக்கிறார் நேசகுமார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றால் என்ன என்று தெரியாமல் காஷ்மீர் அரசியல் போராட்டத்தை இஸ்லாமிய அடிப்படைவாதப் போராட்டம் என்று புரிந்து வைத்திருப்பதிலிருந்தே தெரிகிறது இவரின் அரசியல் அறிவு எத்தனை என்று. முஸ்லீம்கள் எது செய்தாலும் அது இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் அல்லாதவர்கள் தீவிரவாதிகளாயிருந்தால் அது தனிப்பட்ட அல்லது ஒரு குழுவிற்கு சொந்தமான விஷயம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி சொல்லிக் கொண்டு திரிவது நேசகுமார் அய்யா?

நக்சலைட்டுகளாலும், மாவோ தீவிரவாதக் குழுக்களாலும் இந்தியா ஆண்டிற்கு பல லட்சக் கோடிகளை இழந்து வருகிறது அதற்காக வருத்தப் படமாட்டீரோ? இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நடக்கும் பிரிவினைப் போராட்டத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட கோடிகளை இந்தியா இழந்திருக்கிறது, இது எந்த அடிப்படைவாதம் அய்யா? இதற்காகக் கூட இந்தியரான நீங்கள் வருத்தப்பட மாட்டீர்களோ?

அதுசரி, எல்லாவற்றிர்க்கும் ஒரு மனிதன் வருத்தப்பட ஆரம்பித்தால் வாழமுடியாமா என்ன? நல்ல லாஜிக்தான் நேசகுமார். எனக்கு எது பிடிக்கவில்லையோ அதைத்தான் நான் எதிர்க்கமுடியும், சரிதானே அய்யா? அதைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு இஸ்லாத்தைப் பிடிக்கவில்லை, அதைப் பின்பற்றும் முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை, அதனால்தான் எதிர்க்கிறீர்கள். உங்களின் கீழ்கண்ட வரிகளையே எடுத்துக் கொள்வோம்!

ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா? அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், எந்த விஷயத்திலும் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நிச்சயமாக தனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பவன் தான் பக்கத்து வீடு சுத்தமாக இல்லை என்றால் ஆலோசனையும், அறிவுரையும் வழங்க முடியும். அப்படி செய்பவனின் அறிவுரையைத்தான் உலகம் மதிக்கும். என் வீடு இப்படித்தான் நாறிக் கிடக்கும், ஆனால் எனக்கு அடுத்த வீட்டைப் பற்றி விமர்சிக்க உரிமை இருக்கிறது என்று சொல்பவர்களின் மூளை நிச்சயமாக அழுகித்தான் இருக்கிறது என்று அர்த்தம்.

நேசகுமாருக்கு மதங்களைப் பற்றித்தான் சரியான சிந்தனை இல்லையென்றால் அரசியலிலும் அப்படித்தான் இருப்பது மிகவும் பரிதாபமான ஒன்று. அவரின் கீழ்கண்ட வரிகளைப் பார்போம்.

உதாரணமாக இடதுசாரி கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவத்தை விமர்சித்துவிட்டுத்தான் அங்கே செல்ல வேண்டியிருக்கும்

இடதுசாரியை விமர்சிப்பவன் முதலாளித்துவத்தையும் விமர்சிக்கிறான் என்றால் அவன் ஒட்டு மொத்த அரசியலையே விமர்சிக்கிறான் என்று அர்த்தம். அதுவல்லாமல் இடதுசாரியை மட்டும் விமர்சிக்கின்றான் என்றால் அவன் முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை என்றுதானெ அர்த்தம். நேசகுமாரும் அப்படித்தான். இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டும் எதிர்த்து இந்துத் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்றால் இந்து தீவிரவாத ஆதரவாளர் என்றுதானே உலகம் நினைக்கும்.

நான் அப்படியில்லை எல்லா தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் என்று எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் எதிராக நேசகுமாரால் குரல் கொடுக்க முடியுமா? இல்லை என்றால் இந்த வார்த்தை ஜாலங்கள் எதுவும் இங்கு வேண்டாம்.

தனது கருத்தைச் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது கருத்து மோதலாக இல்லாமல் அவமதித்தலும், வெறும் ஆதாரமற்றவைகளைக் கொண்டு தானாக ஒரு முடிவுக்கு வந்து சேற்றை வாரி அடித்தால் அதற்கு பெயர் உரிமை இல்லை. உரிமை மீறல் என்று அர்த்தம்.

ஒன்றை எதிர்த்து மற்றொன்றை எதிர்க்க மறுப்பவன் தனக்கு சாதகமானதை மட்டும் செய்யக்கூடிய ஒரு சுயநலவாதி என்றுதான் பொருள்படும். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பவன் தான் முதுகெலும்பு உள்ளவன்.

அய்யா, இந்துக்களின் கடவுள்களையோ அல்லது அவரது கொள்கைகளையோ இன்றுவரை நானும், அபு முஹையும், நல்லடியாரும் ஒரு போதும் கிண்டலடித்ததோ அல்லது விமர்சித்ததொ கிடையாது. காரணம் விமர்சிக்கும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் அது ஒரு இனத்தின் நம்பிக்கை அதை புண்படுத்தும் விதத்தில் எதுவும் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் கண்ணியம் காத்து வருகிறேன்.

பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை ஒரு இந்துவின் பார்வையிலிருந்து என்னால் விளக்கமாக தரமுடியும். 'கீதையின் ஜிஹாத்' என்று ஒரு விளக்கமான கட்டுரையை பிரசுரிப்பது மட்டுமல்லாமல் புத்தகமாகக் கூட வெளிக் கொணர முடியும், இறைவன் நாடினால். ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கையைக் கூட என்னால் விளக்க முடியும். பைபிளில் உள்ள தீவிரவாதக் கருத்துக்கள் முதல் பிற மத மக்களை வெறுக்கவும் கொல்லவும் சொல்லும் வசனங்களை மேற்கோள் காட்டி விவாதிக்க முடியும்.

இங்கு யாரும் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை. நியாயமான கொள்கை மற்றும் கருத்து விவாதமாக இருந்தால் வாருங்கள் விவாதிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதுதான் விளைச்சளாக இருக்கும். முதலில் நல்லடியாரின் மறுப்புரைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பிறகு பின்னூட்டமிடுங்கள்.

அழுகியது முட்டையாகவே இருக்கட்டும் உங்களின் மூளையாக இருக்க வேண்டாம்.